Thursday, June 30, 2005

வாசக அன்பர்களின் குழப்பத்திற்கு ஸாரி ! பேராதரவிற்கு நன்றி !
(இரண்டிற்கும் காரணமான ' கேப்ரி'ம்மா, பீ கேர்·புல்மா! )

உங்களில் எவ்வளவு பேருக்கு 'கவியரசு' கண்ணதாசன் அறிமுகம் எனத் தெரியாது; எளிமைத் தமிழில் 'கண்ணதாசனை' அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். அதே போல, கவியரசுவிற்கு ஏற்பட்ட அனுபவங்களில் உருவான பாடல்கள் - மற்றவர்களுக்கு இன்றுவரை அமையவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

பொன்னை விரும்பும் பூமியிலே (ஆலயமணி) பாடலில்

ஆலமரத்தின் விழுதுகள் போலே அணைத்து நீயும் உறவு தந்தாயே
வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு, உயிர்கள் இரண்டு, உள்ளம் ஒன்றே என்னுயிரே...

துணையின் சிறப்பை இதை விட எளிமையாகவும், அழகாகவும் சொல்லவே முடியாது!

இதே படத்தில் வரும் சட்டி சுட்டதடா
பாடலில்

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
(கவியரசுவின் வரிகள் 'கவிப்பேரரசு' கை பட்டு 'கடவுள் பாதி மிருகம் பாதி ' ஆனது நினைவிருக்கலாம்!)

இன்றும் என்னைக் கலங்க வைக்கும் இறுதி வரிகள்

பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

பாடல்களைத் தாண்டி (நம்) மன விகாரங்கள், வாழ்வின் நிலையாமை பற்றி யோசிக்க வைக்க கண்ணதாசனால் மட்டுமே முடியும்.

பி.கு: நிச்சயம் 'ஸென்டி' போடவில்லை; நல்ல தமிழை அறிமுகம் செய்யும் முயற்சியே இது.