Friday, May 19, 2006

மத்தியானம் டி·பன் பாக்ஸை தொறந்தா, வழக்கம்போல 4 ரொட்டி; கூடவே தொட்டுக்க உருளைக்கிழங்கு கார கறி. இன்னிக்கு என்னமோ தெரியலை, உ கிழங்கு கறி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருந்தது. மெதுவா சாப்ட ஆரம்பிச்சேன்.

ரொட்டியோட சாப்டும்போது காரம் தெரியல, கறியைத் தனியா சாப்டா காரம் தூக்குது!! 4 ரொட்டி காலியாச்சு; ஆனா கறி ஆவேல்ல; கொஞ்சம் நெறயா இருந்தது! (கறிய விட்டு வெச்சா மாமி விட்டு வெக்க மாட்டாளேன்னு) மிச்சத்த சாப்டு வெப்போம்னு காலி பண்ணா.....'யப்பா! நாக்கு எரிஞ்சு, நெஞ்சு எரிஞ்சு நார்மலா எரியற வயிறும் சேந்து எரிய ஆரம்பிச்சது!'

அப்டி இப்டின்னு 'cat in the hot tin roof' மாறி அலைஞ்சேன். சேஞ்சுக்குப் பதிலா கொடுக்கற சாக்லேட் கூட இன்னிக்குனு கவுண்டர்ல இல்ல! மெனுல போட்ருந்த எக்ஸ்ட்ரா ஸ்வீட் (5 ரூவா!) வாங்கிப் பாப்பம்னு சேமியா பாயசத்தை கிண்ணத்துல எடுத்தாந்து 'லபக், லபக்'.

பாதி கிண்ணம் காலியானப்றமா தெகட்ட ஆரம்பிச்சது! சாப்டவே முடியல! என்ன பண்றது? திராட்சை, முந்திரினு போட்டு வெர்மிஸெல்லி(?!) சேமியால அம்சமா பண்ணிருக்கான்; இதை எறிஞ்சா பண்ணவன்(?!) வருத்தப்படுவானேன்னு தெகட்ட தெகட்ட சாப்டு முடிச்சேன். 'அய்யயோ! ரொம்ப தித்திக்குதே!'

after food 'ஸீரா'வை உள்ள தள்னப்பறமாதான் நார்மலுக்கு வந்தேன் போங்கோ!
இதுலேந்து என்ன தெரியறது?

1. மாமிகிட்ட ஸ்ட்ராங்கா காரத்தை கம்மி பண்ண சொல்லணும்! (ஹவுஸ்காரி சமையல குத்தம் சொல்ற தெகிரியம் லோகத்துல எந்த ஹஸ்பெண்டுக்காவது உண்டா?!)

2. 'moral of the matter' என்னன்னா, வாழ்க்கை ரொம்ப ஸ்வீட்டா இருந்தாலும் கஷ்டம்; ரொம்ப காரமா இருந்தாலும்.

இப்டில்லாம் சொல்லி போரடிக்க போறதில்ல. ஒத்தை வரில எல்லாம் ஓவர்.

நேக்கு ரொம்ப காரமும் ஆகாது; ரொம்ப ஸ்வீட்டும் ஆகாது! அவ்ளோதான்!!
அரசுக் கண்ணா, பெண்கள் போடும் டிரெஸிலேயே எதுடா செக்ஸி? சொல்லுடா?

மிஸ்டர் அரசு, சற்று ஒதுங்கிக் கொள்ளவும். இதில் எக்ஸ்பர்ட்டான திருவாளர் குஷ்வந்த்சிங் அவர்கள் இதைப் பற்றி பேச வருகிறார். "ம்கும்" தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆர்வத்துடன் பதில் சொல்லத் துவங்குகிறார். சிங் "அதாவது..இந்தப் புடவை இருக்கிறதே, அது அலங்காரத்துக்கு அலங்காரம். எல்லாவற்றிற்கும் மிக வசதியானதும் கூட. சரியாக அணியப்பட்டால் பெண்களின் அங்க அசைவுகளையும், பின்புறங்களின் செழிப்பையும் அதைப் போல் வெளிச்சம் காட்டக் கூடிய உடை எதுவும் இல்லை. சரியாக வெட்டித் தைக்கப்பட்ட ரவிக்கை, அதேபோல் மார்பழகை எடுத்துக்காட்டக் கூடியது. வயிறு, இடைப் பகுதிகளைப் பளீரென்று தெரியும்படி காட்டவும் வல்லது. ஒல்லியான பெண்ணைப் பருமனாகவும், பருமனான பெண்ணை ஒல்லியாகவும் மாயம் செய்து காட்ட வல்லது இந்தப் புடவை. அத்துடன் வேறு சில விஷயங்களுக்கும் வசதியானது...." ஹல்லோ மிஸ்டர் சிங்...போதும் இத்தோடு நிறுத்திக் கொள்கிறீர்களா?

-அரசு பதில்கள், குமுதம் வார இதழிலிருந்து
ரொம்ப நாளாகவே எழுத்தாளர் சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கதைகள் வராததில் ஏக்கமாகிப் போய்விட்டது. இந்த வார ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்தால் 'கணேஷ்-வசந்த்' மர்மத் தொடர் ஆரம்பம் என அட்டையிலேயே போட்டிருந்தார்கள். 'சில்வியா' என்கிற தலைப்பில் துவங்குகிற கதை எடுத்த எடுப்பிலேயே நான்காவது கியரில் போய்விடுகிறது. முடிந்தால் தொடர்ந்து படித்துப் பாருங்கள்!
இரண்டு வருடங்களுக்கு முன் காவ்யா விசுவநாதன் என்ற பெயர், ஆங்கில இலக்கிய உலகில் திடீரென்று அடிபட்டுப் பரபரப்பு ஏற்படுத்தியது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும், பதினேழு வயதுப் பெண்ணான இவர் எழுதிய முதல் நாவலுக்கு அத்தனை மவுசு, புகழ், கீர்த்தி.

சமீபத்தில் இவருடைய இரண்டாவது நாவல் வெளியாகி, இன்னும் பெரிய பரபரப்பு. How Opal Mehta Got Kissed, Got Wild, and Got a Life என்பது அதன் பெயர். (இதன் நீளத்துக்காகவே தனிப் பரிசு தரலாம்). இதற்கும், எழுதவிருக்கும் அடுத்த புத்தகத்துக்குமாக ஐந்து லக்ஷம் டாலர் கொடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் சினிமா எடுத்தால் அது தனியே பண மழை கொட்டும்.

இந்தப் புத்தகத்தின் பெருமை எல்லாம் சில வாரங்களுக்குத்தான். மெகான் மெக்க·பர்ட்டி என்ற பெண்மணி எழுதிய இரண்டு நாவல்களிலிருந்து பல பகுதிகளைத் திருடி, காவ்யா விசுவநாதன் 'ஓபல்' நாவலைப் படைத்திருக்கிறார் என்ற குட்டு வெளிப்பட்டுவிட்டது. நாவல்களிலிருந்து இருபது இடங்கள் அப்படியே திருடப்பட்டிருப்பதாக முதல் தகவல்; பிறகு வந்த தகவலின்படி நாற்பது இடங்கள்!

வேறு வழியில்லாமல் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் காவ்யா. மெக்க·பர்ட்டியின் நாவல்களை 'ரொம்ப ரொம்ப' ரசித்துப் படித்திருந்ததாகவும், அதனால் தன்னையும் அறியாமல் சில பகுதிகள் தனது புத்தகத்தில் இடம் பெற்று விட்டன என்றும், மன்னிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறாள். இதற்குள் உலகெங்கும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகிவிட்டன!

Adam was the only man, who, when he said a good thing knew that nobody had said that before him என்று மார்க் ட்வெயின் சொன்னது போல, ஒரிஜினலாகச் சிந்தித்து, ஒரிஜினலாக எழுதுகிறவர்கள் யாருமே கிடையாது போலிருக்கிறது!

காவ்யா விசுவநாதன் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டபோது, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இத்தனை புகழ் கிட்டியிருக்கிறதே என்ற சந்தோஷம் முதலில் ஏற்பட்டது. சென்னையில் பிறந்தவர் என்பதைத் தவிர, அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று தெரிந்து, அவமானத்திலிருந்து தப்பினோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

-டெலிவிஷயம், வினோத், துக்ளக் வார இதழிலிருந்து
கலர் டிவி, கேஸ் அடுப்பு, இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இரண்டு ஏக்கர் நிலம், விவசாயக் கடன் ரத்து என மலிவான இலவச அறிவிப்புகளுக்குப் பலியான தமிழக மக்கள் 'குத்து' 'குத்து'னு குத்தியதில் தி.மு.க. கூட்டணி இன்று (பகுத்தறிவு பாசறை சித்ரா பௌர்ணமி, 9-10.30 ராகுகாலத்திற்குப் பின்) பதவியேற்று, அரியணையில் அமர்ந்து விட்டது. யோசித்துப் பார்த்ததில், இலவச அறிவிப்பு வந்தபோதும் ஏற்காத மக்கள், நிதியமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்கள் 'இது சாத்தியம்'தான் என்று சொன்னவுடன் நம்பி விட்டார்கள் என்றே தோன்றுகிறது! தி.மு.க. தலைவர் திரு கருணாநிதி விடுத்துள்ள ஒரு அறிக்கை இதோ:

'தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு பல உறுதி மொழிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கை நம்பித்தான் தந்திருக்கிறேன். உறுதி மொழிகளை நிறைவேற்றும் வரத்தை அவரிடம் வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!'

ஈஸ்வரோ ரக்ஷது!

பின்குறிப்பு:
1. 70 சதவீத வாக்கு பதிந்திருக்கிறது.

2. பாமக தேயத் துவங்கியிருக்கிறது.

3. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுக தயவு தேவைப்படுவது போல், இங்கு காங்கிரஸ் தயவு திமுகவுக்கு மிக மிக அவசியம். ஆக, காங்கிரஸ் 'நிபந்தனையற்ற ஆதரவு' தெரிவித்ததின் பின்னணி, திமுக இனி மத்தியில் எடுக்கப்படும் முடிவுகளுக்குக் கமுக்கமாக ஆதரவு தர வேண்டும் என்பதே!

4. பாமக, மதிமுக அணிகளுக்கு ஈடான வாக்குகளை (சுமார் 27 இலட்சம்) விஜயகாந்த் தலைமையிலான ஆறு மாத தேதிமுக கட்சி பெற்றிருக்கிறது. வன்னியர்களின் பாசறையான விருத்தாசலத்தில் மிகத் தைரியமாகப் போட்டியிட்டு 15000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்த் அவர்களின் துணிச்சலுக்கு ஒரு சலாம்! 2011 தேர்தலில் கவனிக்கப் பட வேண்டிய இடத்தில் நிச்சயம் தேதிமுக இருக்கும் என்கிற நம்பிக்கை தனித்து நின்றிருப்பதின் மூலம் வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

5. அது சரி, இனி வைகோ, சரத், ராதிகா, விசு, கதி?!!

Saturday, May 13, 2006

பொதுவாய் நான் குலதெய்வத்தைத் தரிசிக்க வேண்டி குணசீலம், தங்கையைப் பார்க்க வேண்டி தஞ்சை, இஷ்டதெய்வத்தைத் தரிசிக்க வேண்டி சுவாமிமலை, ஏதேனும் விசேஷத்திற்கு வேண்டி சென்னை தவிர எங்கும் என் குடும்பத்தை அழைத்துச் சென்றதில்லை. இம்முறை 'பாச்சா' சிவாவிடம் பலிக்கவில்லை! இதனால், கோடை விடுமுறையில் கேரளா மற்றும் கன்யாகுமரி பிரயாணிப்பதாய் முடிவு செய்தோம்.

ட்ரெயின் காலை பத்து மணிக்கு (2 மணி நேரம் தாமதம்) வந்ததில் வெய்யில் ஏறி, (ஏஸியிலிருந்து) திருச்சூரில் காலை வைத்தவுடன் சுட்டெரித்தது. ட்டோ பிடித்து வந்தால், திருச்சூர் பிரசித்தி பெற்ற 'திருச்சூர் பூரம்' பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. வாடகைக்கு அறை கிடைப்பதும் 'சிரமம்' என்று தெரிந்ததில், 'பாரத் க•பே'யில் டிபனை முடித்து விட்டு குருவாயூருக்குக் காரில் பயணமானோம்.

சரியாய் 11.30 மணிக்கு குருவாயூர் வந்து சேர்ந்தோம். ஹோட்டல் அயோத்யா-வில் ரூம் போட்டு விசாரித்ததில் 12 மணிக்கே கோயில் மூடப்படும் (தவறான தகவல்!) என்றதில், 20 நிமிஷத்தில் எல்லோரும் குளித்து விட்டு ரெடி! அரக்கப் பரக்க கோயிலுக்குச் சென்றால் கூட்டம் நெரிந்தது!

தாகத்தால் தவிக்கும் அன்பர்க்கு வேண்டி வெட்டி வேர் சேர்க்கப்பட்ட 'சுடுவெள்ளம்' அண்டாக்களில் நிரம்பியிருக்க, கர்ம சிரத்தையாய் ஒரு சேவகர் டம்ளர்களில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இரு புற தந்தத்துடன் ஒரு யானை கம்பீரமாய் நின்றிருந்தது. பிரஸாதக் கவுண்டர்களில் வரிசை நீண்டிருந்தது. துலாபார காணிக்கை தர வேண்டி வரிசையில் மக்கள் அமைதியாய்க் காத்துக் கொண்டிருந்தார்கள்.

துவிஜஸ்தம்பத்திலிருந்து பார்த்தபோது நடை சார்த்தியிருப்பது தெரிந்தது. அனுமன் வால் போல் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டோம். பக்கத்திலுள்ள ஹாலில் நாட்டியம் அரங்கேறிக் கொண்டிருந்தது. வரிசை நகரவேயில்லை....நிமிடங்கள் கரைந்து மணி 1 கிவிட்டதில் கவலையாய்ப் போனது. தரிசனம் கிட்டுமோ?

சுற்றியிருந்தவர்கள் பொறுமை கலைய, நான் 'நீங்க கொடுத்து வெச்சிருக்கீங்க, நிச்சயம் கிடைக்கும்' என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன் (எனக்கும் சேர்த்து!). திடீரென வரிசை நகரத் துவங்க, எல்லோருக்கும் சந்தோஷம். 10 நிமிடங்களில் பிரகாரத்திற்கு வந்து விட்டோம். வெயில் ஏறி உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்ததை பொருட்படுத்தாது ஜனக் கூட்டம் 'பால க்ருஷ்ணனை' காணக் காத்திருந்தது.

இதற்குள் 'மகளிர்'க்கான வரிசை அழைப்பு வர மாமியையும் விஷ்ணுவையும் அனுப்பி வைத்தேன். மிக விரைவாக மகளிர் வரிசை நகரத் துவங்கியது. மாமி என்னை விட கொடுத்து வைத்ததில் எனக்கு முன்னே தரிசனம் கிட்டி, வெளியேயும் வந்து விட்டாள்!

பத்து நிமிடங்களில் 'நடை'க்கு வந்து விட்டோம். வாசற்படியில் ஒற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தால்...கௌபீன க்ருஷ்ணன் சந்தனக் காப்பில் ஜ்வலித்தார். 2 அடி இருக்கும் மூர்த்தியின் கீர்த்திதான் என்னே? மின்சாரத்தின் துணையில்லாது எண்ணெய் விளக்கின் ஒளியில் நமக்காக நின்றிருக்கும் 'எண்டே குருவாயூரப்பா!' இதற்குள் மெலிதாகக் கைபிடித்து சிவாவுடன் வெளியேற்றப்பட்டோம்!

உள்ளே கணபதி சன்னிதியிலும் கூட்டம் அதிகமானதில், பார்க்கும் சையைக் கைவிட்டு, வெளியே வரலாம் என்றால் அதற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது! வெளியே அம்மனை தரிசித்து, பின் அய்யப்பனைக் கண்டு நடையில் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தபோது மனது நிறைந்துதான் போனது.

இவ்வளவு கூட்டமும் 25 நிமிடங்களில் பகவானை தரிசித்து, வெளியே வந்தபின் 'நடை' 1.30க்குச் சார்த்தப்பட்டது!

தரிசினத்திற்கு வேண்டி வரிசையில் நிற்க முடியாதவர்கள் / நேரம் இல்லாதவர்களுக்கு வேண்டி இதோ ஒரு 'செறிய' அறிவுரை

அதிகாலை 5.30 மணி சென்றால் காலை 6.30 மணிக்குள் தரிசனம்.
நண்பகல் 12.30 மணி சென்றால் நண்பகல் 1.30 மணிக்குள் தரிசனம்.
மாலை 5.30 மணி சென்றால் மாலை 6.30 மணிக்குள் தரிசனம்.
இரவு 8.15 மணி சென்றால் இரவு 9.00 மணிக்குள் தரிசனம். (சில தினங்களில் ஸ்ரீ வேலி என அழைக்கப்படும் வைபவமும் இதற்குப் பின் உண்டு!)

கவனிக்க வேண்டிய பின்குறிப்பு: ஜனக்கூட்டத்தைக் கண்டு மிரண்டு விடக் கூடாது.

ஆண்கள் சட்டையைக் கண்டிப்பாகக் கழற்ற வேண்டும்; வேட்டி மட்டுமே அணிய அனுமதி உண்டு. பெண்கள் புடவைதான் உடுத்த வேண்டும். வேறு டைகளுக்கு அனுமதி இல்லை. மொபைல் / கேமிரா அனுமதி இல்லை. எந்த bag-க்கும் அனுமதி இல்லை. தர்ம தரிசனம் மட்டும்தான் உண்டு. 'குறுக்கு' கட்டண தரிசனங்கள் கிடையாது; அதே போல், கோயில் ஊழியர்களைக் 'கண்டு' கொண்டு செல்வதெல்லாம் மூச்! இதனால் கோயில் சுத்தமாகவும், அனாவசிய சத்தங்கள் இல்லாமலும் சாந்நித்யம் நிறைந்திருக்கிறது.

குருவாயூரைத் தரிசிப்பவர்கள் ஒரு கிமீ தொலைவிலுள்ள மம்மியூர் சிவ பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். 10 ரூபாய் கொடுத்தால் ட்டோவில் சௌகரியமாய்க் கொண்டு விடுகிறார்கள்.

விடுதிக் கட்டணங்கள் 'கிழக்கு நடை', 'மேற்கு நடை' வீதிகளில் 70 ரூபாயிலிருந்து துவங்குகின்றன. அதிக பட்சம் ரூ 2000 வரை போகும் என நினைக்கிறேன்!

'கிழக்கு நடை' என அழைக்கப்படும் வீதியில் உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. 'சரவண பவன்', 'சுக் சாகர்', 'வுட்லேன்ஸ்' என்ற பெயரை நம்பி உள்ளே போனால் ஏமாற்றம் நிச்சயம்! னாலும், கொஞ்சம் தரமாய் இருக்கின்றன. கா•பியை விட தேநீர் தேவலை நீராய் இருக்கிறது.

'மேற்கு நடை'யில் அவ்வளவாக உணவகங்கள் இல்லை. அதனால் கிழக்கு நடையிலே விடுதி எடுப்பது கொஞ்சம் சௌகரியம்.

திருச்சூரில் தங்க முடியாமல் போனது கடவுள் அருள்தான் போலும். இல்லையா பின்னே? இரு தினங்களில் ஐந்து முறை குருவாயூர் அப்பனை தரிசித்திருக்க முடியுமா? அதுவும் நான்கு வருடங்களுக்குப் பின்!