Sunday, November 25, 2012

துப்பாக்கி!

தமிழ் சினிமாவுக்குத் தேவை உடனடி ஹிட்.
பெரிதாய் எதிர்பார்க்கப்பட்ட அரவான், 3, பில்லா-2, சகுனி, முகமூடி, தாண்டவம், மாற்றான் படங்கள் எதுவும் எடுபடாத நிலையில், துப்பாக்கியின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு ஒரு டானிக்.
சுஜாதா எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. சிவாஜி படத்தின் வெற்றியைப் பற்றி பாலு மகேந்திராவுடன் பேசிக் கொண்டிருந்தாராம். ‘எல்லாப் படங்கள் மாதிரிதானே இருக்கிறது? வெற்றிக்கான காரணம் புரியவில்லையே?’ என்று சுஜாதா சிலாகித்ததற்கு பாலு மகேந்திரா அவர்களின் பதில் ‘காரணங்களை ஆராயாதீர்கள். வெற்றி முக்கியம்’.
ஆக, துப்பாக்கியின் வெற்றி தமிழ் சினிமாவுக்குத் தேவை. அது விஜய படமாய் அமைந்தது தற்செயல்.
Mission Impossible படங்களை ரசிப்பவர்கள் துப்பாக்கியையும் ரசித்துத்தான் ஆக வேண்டும். லாஜிக் ஓட்டை பார்ப்பவர்கள் 3 இடியட்ஸ், கஹானி, போன்ற படங்களைப் பார்ப்பது உடலுக்கு நல்லது (பி.பி எகிறாமல் இருக்கும்!)

இனி....



துப்பாக்கியின் படத்தைக் குடும்ப சகிதமாகப் பெங்களூர் புறநகர் திரையரங்கில் பார்த்தேன்.
80 ரூபாய் டிக்கெட் (ஒருவருக்கு) - குஷன் இல்லாத பாலிவினைல் நாற்காலிகள் - அருமையான சவுண்ட் சிஸ்டம்.
மேற்கொண்டு படிக்கும் அன்பர்கள், துப்பாக்கியின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
பார்க்க விரும்பும் நபர்கள், இப்போது படிக்காமல் பார்த்த பொறவு படிக்கலாம்.
குறிப்பான மூன்று சமாச்சாரங்களைப் பற்றி எழுதுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்
1. கற்பனை வறட்சி
விஜய்யின் அறிமுகக் காட்சி அச்சு அசலாய் தூள் படத்தில் விக்ரம் செய்திருப்பார்.
வீட்டில் தீவிரவாதியை ஒளித்து வைக்கும் காட்சி, பின்னால் காதலியையும்...கில்லியிலிருந்து சுடப்பட்டது.
படத்தின் இறுதிக்காட்சி கில்லியை நினைவூட்டுவதை விஜய் ரசிகனாலேயும் மறுக்க முடியாது.
2. இறுதியில்‘படம் ராணுவ வீர்ர்களுக்கு சமர்ப்பணம்’ என்று டைட்டில் போடுகிறார்கள்.  அது சரி, கொடுத்த விலை என்ன?
விஜய்யின் மேலதிகாரியாய் வரும் ஜெயராம் முதலிலேயே ‘ஸ்ட்ரிக்ட், ஸ்ட்ரிக்ட்’ என்று சொல்லுவது தெரிகிறது.  அவரை வைத்து வடிவேலு ரேஞ்சில் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.  இவ்வளவு அசமஞ்சமாக (அம்மாஞ்சி பாஷைக்கு மன்னிக்கவும்)
ஒரு ஆப்பீஸர் இருப்பாரா என்பது சந்தேகமே.  இதில் நடிக்க ஜெயராம் ஒத்துக்கொண்டதற்கு ஒரே காரணம் சம்பளமாய்த்தான் இருந்திருக்க முடியும்.  இந்தக் காட்சி ஆர்மிக்கு அர்ப்பணம் இல்லை தர்ப்பணம் (அம்மாஞ்சி பாஷைக்கு மீண்டும் மன்னிக்கவும்)!
விஜ்ய நண்பராக சத்யன் வரும்போதே ’பகீர்’.  ‘அடடா! மனிதர் க்ளைமேக்ஸுக்கு முன்னால செத்துப் போயிடுவாரே!’சாகாத ஆறுதல் போய் காவலர் சீருடையைப் போட்டுக்கொண்டு மொத்தக் காவல்துறையையும் அசிங்கப்படுத்தும் அவலம்.  ’தீவிரவாதி நம்மை மோப்பம் பிடித்து வருவதற்குள் நாம் ஏதாவது செய்ய வேண்டுமே?’ என்று விஜய் ஆதங்கப்படும்போது, சராசரிக்கும் கீழான நண்பனாய் மாறி ‘சீக்கிரம் ஏதானும் செஞ்சாணுமே, யோசிடா, நல்லா யோசிடா’ காட்சியில் நமக்குக் காவல் துறையின் மீதே பரிதாபம் ஏற்படுகிறது.  அது சரி, கதை மும்பையில்தானே நடக்கிறது, மஹாராஷ்ட்ரக் காவல்துறைதானே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும்?!

3. விஜயிஸம்
இந்தப் படத்தில் விஜயிஸம் இல்லை என்பதாக வலைத்தளம் ஒன்று வர்ணித்தது.  படம் பார்க்குமுன் சந்தோஷப் பட்டேன்.  பார்த்தபின் அது ‘போயே போச்’!
காவல்துறையை நாடாத விஜய்யின் அப்ரோச் மிகப் பெரிய கேள்விக்குறி.  ஏன் நாடவில்லை?  ஏனென்றால் அவர் ’விஜய்’!  பார்டரில் இருக்கும் மிலிட்டரி, நாட்டில் நடக்கும் க்ரைம்களைக் களைய லோக்கல் போலீஸைத்தானே துணைக்கு வைத்துக்கொள்வார்கள்?  அதெல்லாம் விஜய படத்துக்குச் சரிப்படாது பாஸு!!
உயர் காவல் அதிகாரியை கையுறை அணியாமல் துப்பாக்கி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டிவிடுவாராம்.  காவல்துறை அப்டியே நம்பிவிடுமாம்.  போலீஸ் நாயை வைத்துத் தங்கச்சியை விஜய் மீட்கும்போது, அதே நாயை வைத்து, விஜய் வீடுவரை
போலீஸ் வந்து விடாதா என்ன?
சந்திரமுகியில் வடிவேலுவிற்கும், சிவாஜியில் விவேக்கிற்கும் ‘ஒரு படி’ மேலே அந்தஸ்து கொடுத்திருப்பார் ரஜினி.  அதற்குக் ரொம்பவே ’தெகிரியம்’ வேண்டும்.  விஜய்க்கு அது எப்போதுமே இருந்ததில்லை.  யூத் படத்தில் கருத்து கந்தசாமியாய் விவேக்
வந்தாலும் படம் நெடுகக் கருத்துக்களை ‘விஜய்’தான் கொட்டிக் கொண்டிருப்பார்.  அதே போல இதில் அடியாள் லெவலுக்கு சத்யனை வைத்திருப்பது விஜய் அவர்களின் மனப்போக்கைக் காட்டுகிறது.  உயரதிகாரிகளுக்கு கார் ஓட்டும் ட்ரைவர் பாத்திரம் போல சத்யன், விஜய்க்குக் காரோட்டுவது தமாஷ்.  எந்தக் காட்சியிலும் சத்யனுக்குக் க்ரெடிட் வந்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே கவனமாக இருந்திருப்பது விஜயிஸம் தானே?
சூப்பரான ஆட்டத்துக்குப் பேர் போனவர் விஜய்.  அது இந்தப் படத்திலும் தொடர்வது ஆறுதல்.  ஆனால், த்ராபையான (அம்மாஞ்சி பாஷைக்கு மீண்டும் மீண்டும் மன்னிக்கவும்!) பாடல்களில் அமுங்கி விடுகிறது.
பாடகராகவும் மாறி பாடித் தள்ளியிருப்பது நன்றாக இருக்கிறது.
கடைசி பாடல் காட்சியில் தான் நன்றாக ஆடிவிட்டு, ஆடவரும் காஜல் அகர்வாலை ‘வேண்டாம்மா!’ பாணியில் சொல்வதும் பக்கா விஜயிஸம்!
விஜய் பாணியில் கொடுக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக முருகதாஸ் களம் ‘இறங்கி’ வந்திருக்கும்போது, இது விஜய் படம்தானே?!

பின் குறிப்பு:
1.  வேட்டைக்காரன் முதல் நாள் முதல் ஷோ பார்த்தபின்னால் நான் விஜய படம் பார்ப்பதில்லை.  ‘சுறா’ படம் பார்த்துவிட்டு, ஸ்பீல்பர்க் ‘சுறா’ கடித்த பாதிப்பில் என் அலுவலக நண்பர் (பெங்களூர் ஐநாக்ஸ், ரூ 250!) கதறி அழுததைக் கண்டபோது, காவலன்,  வேலாயுதம் காணும் ஆசை இல்லவே இல்லை.  நண்பன் படத்தை ஷங்கருக்காகவும், துப்பாக்கி முருகதாஸுக்காகவும் பார்த்தேன்.  என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஏமாற்றம்தான்.
2. சமாச்சாரங்கள் என்றதும் காஜர் ஹல்வா ‘காஜல்’ பற்றி எழுதுவேன் என்று நினைத்த அன்பர்களுக்கு என் வருத்தங்கள். 

1 comment:

shankar said...

அம்மாஞ்சி பாஷை என்று சில வார்த்தைகளை எதற்காகப் பிரிக்க வேண்டும்? எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்? எல்லாமே தமிழ்தானே?