Showing posts with label எம் டி ஆர். Show all posts
Showing posts with label எம் டி ஆர். Show all posts

Monday, September 21, 2009

பல நாட்களாகப் பார்த்து மட்டுமே ரசித்து வந்த மய்யா'ஸ்-க்கு குடும்பத்துடன் சிற்றுண்டி உண்ணச் சென்றேன்.

ஜயநகர் 4வது ப்ளாக் காவல் நிலையம் மற்றும் பிள்ளையார் கோயில் அருகில் அமைந்துள்ள மய்யா'ஸ், எம் டி ஆர் என்கிற பாரம்பரிய உணவகத்தைச் சேர்ந்தது. காலை 7-11 சிற்றுண்டி, மதியம் 12-2.30 சாப்பாடு, மாலை 3-5 நொறுவல், இரவு 6-8 இரவுச் சாப்பாடு, திங்கள்தோறும் விடுமுறை என அட்டவணை போட்டு வைத்தாலும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை.
முதல் தளத்திற்குச் சென்றவுடன், பெயர்/எண்ணிக்கை குறித்துக்கொள்ளப்பட்டு , இடப்பட்ட நாற்காலிகளில் அமர்த்தி வைக்கப்பட்டோம்.

பத்து நிமிட காத்திருத்தலுக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டவுடன் 'என்ன ஆர்டர் ஸார்?' டிபிகல் ஸௌத் இண்டியனாய் 'இட்லி, வடை, சாதா தோசை, மசாலா தோசை' எனக் கூறிவிட்டு அங்கிருந்த தொலைக்காட்சியில் லயித்தோம். 'எது எது செய்யக்கூடாது? செய்யலாம்' என H1N1 அறவுரைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

சுற்றி நொக்கியதில், சமையலறை பளிச்சென கண்ணாடியினூடே தெரிந்தது. பேரர்கள் மிகவும் மும்முரமாய் இருக்க, அந்த இடமே ஒரு துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தது. இதற்குள் 1 இட்லி, 1 வடை வந்துவிட்டது!

இட்லி, தொட்டுக்கொள்ள க்ரீன் சட்னி (சிவா பாஷையில்!) மற்றும் சற்றே இனிப்பான சாம்பார்; தவிர 'இத்துணூண்டு கப்'-ல் நெய்! (அப்டி போடு!) இந்த கப் எல்லா ஐட்டங்களும் இலவச இணைப்பு போல!

நன்றாக ஒரு 'பிடி' பிடித்தபின், 1/2 கா·பி சொன்னோம். வெள்ளி முலாம் பூசப்பட்ட (அல்லது வெள்ளி?!) டம்ளர்கள் வந்தன. அருமையான அரை கா·பி குடித்தது, முழு ·பில்டர் கா·பி எ·பெக்ட்-ஐத் தந்துவிட்டது!

பில்-ஐப் பார்த்த 'மாமி' அவ்வளவு சுரத்தாயில்லை!
1 இட்லி, 1 வடை 35
1 மசாலா தோசை 35
1 சாதா தோசை 30
1 கா·பி 15
அதிசயமாய், க்ரெடிட் கார்ட் வாங்கிக்கொள்கிறார்கள்!

கீழ்த் தளத்தில் இனிப்பு மற்றும் நொறுவல் ஐட்டங்கள் சற்றே தூக்கிய விலையில் கிடைக்கின்றன. இது தவிர பு·பே ப்ரேக்பாஸ்ட் 125-க்கு ஐஸ்க்ரீமுடன் கிடைக்கிறது (ஞாயிறு மட்டும் 150!).

இரண்டாவது தளத்தில் '·பைன் டைனிங்' என்கிறார்கள். என்னவென்று இன்னொரு முறை பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்!

வலது பக்கத்தில் கா·பி கவுண்டர் தனியாக (ரொம்ப நெரிசலுடன்!) ஓடிக்கொண்டிருக்கிறது!
மொத்தத்தில், கையேந்தாமல், கால் ஊன்றாமல், அவதிப்படாமல், அமைதியாகவும், ருசித்தும், ரசித்தும் சாப்பிட்ட மிக சுகமான அனுபவம் மய்யா'ஸ்.