Wednesday, January 26, 2011

இதுவும் கடந்து போகும்!

தனது முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் மயானத்திற்குள் பயப்படாது சென்று மரத்திலிருக்கும் உடலை வீழ்த்தி, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

உடலிலுள் இருக்கும் வேதாளம் மெல்ல நகைத்துப் பேசத் துவங்கிற்று 'என்ன விக்கிரமாதித்தரே?! 2006-ஆம் ஆண்டு பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் வெளிவந்து இன்று வரை சக்கைப்போடு போடும் Rhonda Byrne அவர்கள் எழுதிய 'The Secret'(ஒரு ரகசியம்) என்கிற புத்தகத்தைப் படித்திருக்கிறீரா?'.

விக்கிரமாதித்தன் யோசித்தான். 'சினிமா, ரஜினி, அரசியல், கிரிக்கெட் என்றால் புகுந்து விளையாடி வேதாளத்தை ஏமாற்றிவிடலாம். இது என்ன புதுப் புத்தகக் கதை?' என்று விளங்காமல் கொஞ்சம் முழித்தான்.

'நீர் முழிக்கும் முழியைப் பார்த்தாலே 'இன்னும் படிக்கவில்லை' என்று தெரிகிறது. நான் படித்தவரையில் சொல்கிறேன் கேளும்.

உதாரணத்திற்கு நீங்கள் 'பருமன்' என்று நினைத்துக்கொண்டு 'எடைக் குறைப்'பில் இறங்கினால் பெரும்பாலும் உடல் எடை குறைவதில்லை. உண்ணும் உணவுதான் காரணம் என்ற உங்களுடைய 'நெனப்பு'தான் உணவில் எடை ஏற்றுகிறது! 'எனக்கு வேண்டியதை / பிடித்ததைச் சாப்பிட்டாலும் என்னுடைய உடல் எடை கச்சிதமாயிருக்கும்' என்று சொல்லி உண்ணத் துவங்குங்கள்! உங்களுக்கு ஒன்றுமே ஆகாது! கொஞ்சம் மாற்றியும் யோசியுங்கள். எது உங்களுக்கு ஏற்ற எடையோ அதுவே சரியான எடை. 'நான் 90 கிலோ இருக்கிறேன்; என்னுடைய உயரத்திற்கும், அழகிற்கும் ஏற்ற எடை 70 கிலோதான்' என்று நினைத்தும் முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்!


'நெனப்பு' ரொம்ப முக்கியம் என்று புத்தகம் முழுவதும் சொல்லிக்கொண்டு போகிறார்கள். 'நல்லதை நினையுங்கள், நல்லதே நடக்கும்! ' என்பது அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. 'யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமுமில்லை. நல்லதை நினைத்து இயற்கையிடம் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள். பின் வந்ததாய் முழுவது நம்பி, இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள். இறுதியாக, நினைத்த 'நல்லது' வந்துவிட்டதாய் நம்பி எல்லையற்ற நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளுங்கள். வளம் நிறைந்த இயற்கை உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும்!' என்பதைத் திருப்பித் திருப்பி சொல்கிறார்கள்.

எதிர்மறையாய்ச் சிந்தித்தால் நடநதுவிடக்கூடிய வாய்ப்பு அதிகமாயிருக்கும். உதாரணத்திற்கு
'எனக்கு தாமதம் ஆகாது' என்றால் 'தாமதமாகும்!'
'இந்தக் காலணிகள் கடிக்கக் கூடாது' என்றால் 'கடிக்கும்!'
'என்னால் இவ்வளவு வேலையைச் சுமக்க முடியாது' என்றால் 'என்னால் சுமக்க முடியாத வேலைகள் வேண்டும்!'
'என்னிடம் அப்படிப் பேசாதே!' என்றால் 'அப்படித்தான் பேச வேண்டும்!'

'ஆகாது', 'கூடாது' போன்றவைகளைத் தவிருங்கள். கூடுமானவரை நேர்மறையாய்ச் சிந்தியுங்கள்.

உன்னுடைய வாழ்க்கை உன் கையில். நீ எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், என்ன உனக்கு நடந்திருந்தாலும், உன்னுடைய எண்ணங்களை உன்னிப்பாகத் தேர்ந்தெடுப்பதின் மூலம் உன் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டு மாற்றிவிடலாம். உதவாக்கரை சூழ்நிலை இனி உனக்கில்லை. உன் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பொன்னாய் மாறும்!

என்று ஏகமாய்ச் சிலாகித்துவிட்டு,

'விக்கிரமாதித்தரே! இதுவரை நீர் என்ன புரிந்துகொண்டீர்? உங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்காமல் போனால் உங்கள் தலை சுக்குக் காபியாகிவிடும்!' என்றது வேதாளம்.

சற்றும் தயங்காமல் விக்கிரமாதித்தன் 'நம் முன்னோர்கள் சொன்ன நச் வரிகள் 'எல்லாம் நன்மைக்கே', 'நெனப்புதான் பொழைப்ப கெடுக்குது', 'கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் கொடுக்கப்படும்' 'எண்ணங்களை 'உணர்ந்து' கொள்ளுங்கள்' என்பதையே ஆங்கிலத்தில் புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

மேலும், புத்தகத்தை கொஞ்சம் ஆழ்ந்து படித்தால் 'இதிகாசங்கள் / நான்மறைகள் / திருக்குறள் / திருமந்திர'-த்தின் 'ரீபீட்'டாயிருக்கும் என்றும் தோன்றுகிறது.

நமது எண்ணங்களைப் புரட்டிப்போடும் இந்தப் புத்தகத்தைப் பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்றும் நினைக்கிறேன். முக்கியமாய் 'இதுவும் கடந்து போகும்' என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் அது நல்லதாயிருந்தாலும் / வேறு விதமாயிருந்தாலும் வாழ்க்கையை வளமாயும், நிம்மதியாயும் வாழ முடியும்' என்றான்.

'நன்று சொன்னாய் விக்கிரமாதித்தா! உன் மௌனம் கலைந்தது, என் வேலையும் முடிந்தது!' என்று வேதாளம் பறந்து போய், மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது!

'இந்த ரகசியத்தைக் காப்பாற்ற முடியாமல், வெளியில் சொன்னது நல்லதுதான்!' என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்டான் விக்கிரமாதித்தன்.

ஒரு முக்கியமான பின்குறிப்பு:

என்னுடைய நண்பரும், சென்னை வாசகருமான திரு தியாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் மட்டும் இல்லாவிட்டால், இவ்வளவு நல்ல புத்தகத்தை உங்களுக்கு நான் அறிமுகம் செய்திருக்க முடியாது. இதிலிருந்து ஒரு துளியைத்தான் நான் எளிமைப் படுத்தி எழுதியிருக்கிறேன்.

The Secret, Rhonda Byrne என்கிற இந்தப் புத்தகம் flipkart.com இணையதளத்தில் ரூ 500-க்குக் கிடைக்கிறது (அசல் விலை ரூ 750).

1 comment:

அன்புடன் அருணா said...

நன்றி பூங்கொத்து!!!