Sunday, January 13, 2013

இசைஞானியும் கவிஞர் வாலியும் - 1

எல்.வி.பிரசாத் ‘பிரியா விடை’னு ஒரு படம் எடுத்தார்.  அதுக்கு ஜி.கே.வெஙகடேஷ்தான் இசை.  அதில ஒரு பாட்டுக்கு மட்டும் மியூசிக் லக்ஷ்மிகாந்த் பியாரிலால்.

அதுக்குப் பாட்டு எழுதப் போனேன்.  ஜி.கே.வெங்கடேஷ் என்னைவிட சீனியர்.  அப்போ அவர் ‘இது ஏதோ இந்தி ட்யூன்.   இந்தப் பையன் வாசிச்சு காண்பிப்பான்’னு ஒரு பையனைக் காண்பித்தார்.  அவர்தான் இளையராஜா.  நான் அவன்கிட்ட ட்யூன் கேட்டேன்.  அவனும் பாடிக் காண்பித்தான்.  அப்போ நான் உன் பேர் என்னன்னு கேட்டேன்.  ராஜான்னு சொன்னான்.  உடனே நான் ‘ராஜா பாருங்க, ராஜாவைப் பாருங்க’ன்னு எழுதினேன்.  இப்பக்கூட இளையராஜா சொல்வார்.  ‘அன்னைக்கு நீங்க ராஜாவைப் பாருங்கனு எழுதினீங்க.  அதான் இன்னிக்கு உலகமே என்னைப் பார்க்குது’ன்னு.


நான்
ஏ.சி.திருலோகச்சந்தருக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதிகிட்டு இருந்தேன்.  விஸ்வநாதன் தான் மியூசிக்.  ஒரு படத்துக்குப் பூஜை போடும் சமயம் என்னை வரச் சொன்னாங்க.  நானும் போனேன்.  அப்போ எம்.எஸ்.வி. கார் அங்க இல்லை.  உடனே நான் புரொடக்‌ஷன் மானேஜர் கிட்ட விஸ்வநாதன் சார் வரலையான்னு கேட்டேன்.  உடனே அவர், இந்தப் படத்துக்கு மியூசிக் வேற ஒருத்தர்னு சொன்னாரு.  நான் உள்ளே போனேன்.  அங்கே ஆரூர்தாஸ், திருலோகச்சந்தர் எல்லாம் இருந்தாங்க.  அவர்கள ’அன்னக்கிளி’ படத்துக்கு இசையமைக்கும் இளையராஜாவை எனக்கு அறிமுகம் செய்தார்கள்.  இதுதான் ராஜாவோட முதல் சினிமா சந்திப்பு.

 
பத்ரகாளி படத்துல வரும் ‘வாங்கோன்னா, அட வாங்கோன்னா’ பாட்டுதான் இளையராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாடல்.  அந்தப் பாடல் ரெக்கார்டு பண்ணும் சமயம் நான் இளையராஜாகிட்ட, உனக்கு கிளாசிக் மியூசிக் எவ்வளவு தூரம் தெரியும்னு கேட்டேன்.  கொஞ்சம் தெரியும்னு சொன்னார்.  தியாகராஜ பாகவதர் கீர்த்தனைகள் தெரியுமானு கேட்டேன்.  அப்போ தெலுங்குல அந்த கீர்த்தனைகளை ஹார்மோனியத்தில் வாசித்துப் பாடிக் காண்பித்தார். பிற்காலத்துல இவர் மிகப் பெரிய ஆளா வருவார் என நினைத்தேன்.


இளையராஜா முதல் ஐந்து, ஆறு படங்களுக்குள்ளேயே தன்னால் எல்லாவிதமான இசையையும், கொண்டு வந்தார்.  உதாரணமாக, ‘மச்சானைப் பார்த்தீங்களா’, ‘சின்னக் கண்ணன் அழைக்கின்றான்’ பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவின.  ரீதிகௌளை ராகத்தில் சின்னக்கண்ணன் அழைக்கின்றான் பாடலை இசையமைத்துப் பிரமிக்க வைத்தார்.  சிகப்பு ரோஜாக்கள் வந்த பிறகு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார்.  வெஸ்டர்ன் மியூசிக்கில் அவர் ரீ-ரெகார்டிங் எல்லாம் இருந்தது.


இளையராஜாகிட்ட இருக்கிற ஓர் உயரிய குணம் என்னன்னா எதையும் கஷ்டப்பட்டு முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.  இளையராஜா காலைல 4 மணிக்கு எழுந்திருப்பார்.  கோபாலகிருஷ்ணன்கிட்ட கிளாசிக் மியூசிக் கத்துகிட்டார்.  5.30 மணிக்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ள வகுப்பிற்குச் செல்வார்.  இப்படிக் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்தான் இசைஞானி இளையராஜா.


வாலிப வாலி (நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலை ரூ 250) என்கிற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

No comments: