Wednesday, July 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 48

நேற்று போட்ட எச்சரிக்கைகளை மீண்டும் இடுகிறேன்.

எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.

எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.

ஏற்கெனவே இன்றைக்குப் பொங்கித் தின்பது முடிவாகி விட்டது என எழுதியிருந்தேன்.  அதே போல அலுவலக நண்பர், மூத்தவர் திரு பத்மநாபன் ராமானுஜன் அவர்களின் துணையோடு ஜியார்ஜியில் உள்ள அம்மாஸ் ஸ்பைஸி என்கிற இந்தியக் கடைக்குச் சென்றேன்.

உரிமையாளர் நன்றாகவே தமிழினார்.  ‘என்ன ஸார்! வெயில் திடீரென்று காணாமல் போனது?’ என பத்மநாபன் (ரா) விசாரிக்க, ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ஐயா, மதியம் வெய்யில் சுள் என்று அடிக்கும்’ என்றார் (மதியம் வெயில் அடித்தது!).  மாதிரிக்குக் கொடுத்த பேரீச்சம்பழம் ரொம்பவே சூப்பர்.

அரிசி, பருப்பு, காய், நெய், எண்ணெய், கடுகு, சீரகம், மிளகுத்தூள், புளி பேஸ்ட், புளி மாங்காய், தக்காளி, மாகி பொட்டலங்கள் - அள்ளிக் கொண்டேன்.  பில் 24 பவுண்டுகளுக்கு வந்திருந்தது.  மாலை சின்னதாய் அடித்த ரவுண்டில் டோ-நட், சீஸ் பேஸ்ட்ரி உள்ளே போக, சடுதியில் ஒன்கேன் சாதா தயிர் டப்பாவை சால்ஸ்பெரி அங்காடியில் வாங்கி விட்டேன்.

அலுவலகம் தாமதமாய் முடிந்து வழியைத் தவறவிட்டு வீடு வந்து சேரும்போது மணி எட்டடித்து பதினைந்து நிமிடங்கள்.  பெட்டியிலிருந்து குக்கர், கடாய், பாத்திரங்களை எடுத்தேன்.

ஷீர்டி ஸாயியை வேண்டிக் கொண்டு, பருப்பைக் குக்கரில் ஏற்றி, அப்படியே இந்தப் பக்கம் ரசத்தைத் தயார் பண்ணி, ஸைடில் மாங்காய் நறுக்கி வைத்து, ஓரத்தில் உருளையை வேக வைத்தேன்.  பருப்பு வெந்தவுடன், கொஞ்சம் எடுத்துத் தனியாய் ஃப்ரீஸரில் போட்டாச்சி!  மிச்சதை ரசத்தில் விட்டாச்சி.  சாதமும் வெச்சாச்சி!  மணியும் பத்தடிக்க பதினைந்து நிமிடங்கள் ஆயாச்சி!

ஷீர்டி ஸாயியை நினைத்துக் கொண்டு, ரசத்தை ஊற்றிச் சாப்பிட்டால் ‘அடடே! உப்பு நன்னா கொறைஞ்சிருக்கே!’ அதுக்குத்தான் உருளை சிப்ஸ் (கடையில் வாங்கியது) இருக்கே!  தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சரியாக இருந்தது.

சாதா தயிரைச் சாதத்துடன் சாப்பிட்டால் தேவாமிருதம் போங்கள்.

ஆக, சுயம் பாகத்துடன் இன்று இனிதே ஆரம்பம்.

1 comment:

JK said...

Vengayam, yaaruda ange poga sonnathu ippadi thaniya poga vensiyathu apparama engalayaum ippadi padutha vendiyathu...poda po...