ரயிலில்
ஆளே இல்லாமல் ஒண்டியாய் பயணம் செய்த அனுபவம்
உண்டா? எனக்கு
மிக அரிதான, அருமையான காலைப்
பயணம் ரயிலில் – பெங்களூர்-மைசூர்- நேற்று வாய்த்தது.
6.00 மணிக்குக் கிளம்பிய
காவேரி எக்ஸ்பிரஸ் ‘ரெண்டாம் வ(கு)ப்பு’
பெட்டியின் ஆறு இருக்கைகள் எனக்குச்
சொந்தம். கம்பெனி
விஷயமாகப் போனாலும் ‘ரெண்டாம் வகுப்பு’ ராசி என்னை விடுவதாயில்லை!
சில்லென்ற
முகத்தை வருடிப் போகும் காற்றில்,
கையில் சில்லென்று ‘மாஸா’ / கண்ணதாசன் வனவாசம்
புத்தகம். போதாதா
வாழ்க்கைக்கு?
எத்துணை
முறை படித்தாலும் அலுக்காத புத்தகங்களில் கண்ணதாசன் வனவாசம் உண்டு. ஒவ்வொரு முறை படிக்கும்போதும்,
நெகிழ்ந்து, மகா கவிஞனைக் கண்டு
அயராமல் இருக்க முடியவில்லை.
மகாத்மா காந்தியடிகள் அவர்களின் சுயசரிதைக்குப் பின்னர், உண்மைக்கு வெகு அருகில், ‘பாசாங்கு’
இல்லாமல் (சங்கர் அண்ணா, கவனிங்கோ!)
எழுதப்பட்ட வனவாசம் – ’அடேங்கப்பா’ ரகம்!
நம்மில்
எத்துணை பேர் ‘நல்லவன்’ என
நிரூபிக்க எப்படியெல்லாம் முயற்சிக்கிறோம்? முகப்புத்தகத்தின்
சில பக்கங்களைப் பார்த்தாலே போதும். ‘நான்
நியாயவான், தர்மத்தின் தலைவன், உண்மையின் மறுபக்கம்’
என்கிற வகையில் படைப்புகள் ஒவ்வொரு
நொடிகளிலும் படைக்கப்படுகின்றன. தன்னுடைய
அழுக்கை நெஞ்சிலே சுமந்து, நல்லவற்றை மட்டுமே வெளிக்காட்டி நடந்து
கொள்வதுதான் நேர்மையா? இதில்
சிலர் ‘கண்ணதாச’னைப் படித்தவர்கள்
என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.
’திறந்த புத்தக’மாய் அமைந்த கண்ணதாசன்
அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். அவரே
சொல்வது போல ‘எப்படியெல்லாம் வாழக்கூடாது’
என்கிற பாடம். முரண்பாடு
கொண்டவன்தான் மனிதன் என்பதைக் கோடிட்டு
அவரது வனவாசம் காட்டுகிறது. ‘நம்மால்
இப்படி அம்மணமாய் இருக்க முடியுமா?’ என்கிற
விடை காணா மிகப் பெரிய
கேள்வி சூழ்கிறது.
தனிமையான
ரயில் பயணம், வனவாசத்துடன் அமைந்தது
எதிர்பாரா மகிழ்ச்சி. வாழ்க்கையின்
சில அற்புதத் தருணங்கள் இப்படித்தான் திட்டமிடாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. எல்லோருக்கும்.
பெண்களைக்
கொண்ட, சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்ட இரண்டாம் அத்தியாயம்
நாளை.
No comments:
Post a Comment