Showing posts with label மாலன். Show all posts
Showing posts with label மாலன். Show all posts

Sunday, December 06, 2009

கவிதை என்ன செய்யவேண்டும்?

இந்தியா தனது ஜனநாயகத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைப் போல நம் கவிஞர்கள் கவிதையைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதை என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கையையும் மொழியையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சமூகத்தையும் சக மனிதர்களையும் காதலிக்கக் கற்றுத்தரவேண்டும். மரபின் மீது பெருமிதமும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

கவிதைகள், தலையில் அணியும் மகுடமோ, காலில் குலுங்கும் கொலுசோ அல்ல.

அவை நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள சாவிகள். நம்மை நாமே திறந்து பார்க்க, சமூகத்தை அதன் மீது பூட்டப்பட்டுள்ள விலங்குகளில் இருந்து விடுவிக்க, எதிர்காலத்தின் புதிர்களைத் திறக்க நம்மிடம் ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்டுள்ள சாவிகள்.

கவிதை என்பதுதான் என்ன? அது வார்த்தைகளின் வடிவம் மட்டும் அல்ல. இலக்கணம் கொண்டு இயற்றப்ப்டுவதோ, அறிவைக் கொண்டு அமைக்கப்படுவதோ அல்ல. அது காதலைப்போல ஒரு மனம் சார்ந்த உணர்வு. இலக்கணத்துக்குள்ளே இருந்துகொண்டும் இயங்கலாம். விலங்குகளை உடைத்துக்கொண்டு விடுதலையாகியும் பறக்கலாம். ஆனால் அதற்குள் மனம் இருக்கவேண்டும்.

கவிதை என்பது குழந்தையின் சிரிப்பு; மேதையின் பிழை; இளைஞனின் கோபம்; நடுவயதுக்காரனின் நம்பிக்கை. கிழவனின் ஆன்மீகத் தேடல்.

இவை எல்லாவற்றின் பின்னாலும் இருக்கிறது பொய்கள் அற்ற ஒரு மனம். அது கவிமனம்.

-சொல்லாத சொல், மாலன், கிழக்குப் பதிப்பகம்

Sunday, November 29, 2009

தமிழ்!

"தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு?"

"அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?"

"கனவா?"

"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்னு படிப்பீங்க. வேலை இல்லாக் கொடுமையைக் கூடத் தாங்க முடியாமல் துவண்டு விழுவீங்க. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். சரி, ஆனா வயிற்றுக்கு என்ன வழி? படிப்புங்கறது வேலைக்குத்தானே? ஞானம் பெறுவதற்காகவா?"

"இப்படி தடாலடியாவே பேசினா எப்படிம்மா?"

"அப்பா, மல்லிகைப்பூ அழகானதுதான். வாசனையானதுதான். மனசுக்குப் பிடிச்சா அதைக் கோத்துத் தலையில வைச்சுக்கலாம். ஆனா சமையல் பண்ண முடியுமா?"

"அப்போ ஒரு விஷயத்துக்கு யுடிலிடி இருந்தாத்தான் மதிப்பா?"

"ஒரு கமர்ஷியலான சமூகத்தில அப்படித்தான்."

"வியாபார உலகத்தில தமிழுக்கு இடமே இல்லையா? தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க?"

"ஆனா அங்கெல்லாம் தமிழ் படிச்சவங்க மட்டும்தான் வேணும்னு கேட்கலையே?"

......

"முடிஞ்சா உன் தமிழை ·பங்ஷனலா, நடைமுறைக்கு உகந்ததாப் பண்ணு. இல்லைன்னா கம்முனு இரு."

- இதெல்லாம் யாருடைய தப்பு?, மாலன் சிறுகதைகள், கிழக்குப் பதிப்பகம்